ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்: குஜராத்தின் 17வது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் 17வது முதல்வராக பூபேந்திர படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.  குஜராத் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன், முதல்வர் விஜய் ரூபானி திடீரென பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல் முறை எம்எல்ஏவான பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று பிற்பகலில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா  நடந்தது. பூபேந்திர படேல் மாநிலத்தின் 17வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில மாநில முதல்வர்கள் விழாவில் பங்கேற்றனர். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

Related Stories: