சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே வந்திருக்கிறது கடந்த அதிமுக அரசு. ஆட்சி அமைந்ததும் அந்த ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை இந்த அரசு பெற்றிருக்கிறது. இறுதி அறிக்கையை பிப்ரவரி 22ம் நாளுக்குள் கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை நிச்சயமாக நாங்கள் எடுப்போம்.