சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு..!

சென்னை: தமிழகத்தில் கொரோன தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் தலைநகர் சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது அலையால் மாநிலம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா தொற்று தமிழக அரசின் தீவிர முயற்சியால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த மே மாதம் 36 ஆயிரமாக இருந்த தினசரி தொற்றின் எண்ணிக்கை தற்போது 1,600-ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1608 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் பலியாகினர். 1,512 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 160, தஞ்சையில் 115, செங்கல்பட்டில் 113 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அரியலூர், கடலூர், ஈரோடு, புதுக்கோட்டை கரூர் உள்பட 26 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு எதுவும் நேற்று பதிவாகவில்லை. அதேசமயம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 170-ஆக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 197-ஆக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சென்னையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories: