அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும், அடுத்தாண்டு மானிய கோரிக்கைக்குள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி ஒரு இயக்கமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்துசமய மற்றும் அறநிலையத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், செயல் பாபு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை கூறியது எனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப்புகழும் முதல்வருக்கு தான். அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் வரும் 17ம் தேதி தொடங்கப்படும். நீட் தேர்வால் தற்கொலை போன்ற முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும். முதலமைச்சர் விரைவில் சட்ட போராட்டத்தின் மூலம் நீட் தேர்வு ரத்து செய்வார். தற்போது என்பது தீர்வு அல்ல. இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்தாண்டு மானிய கோரிக்கைக்குள் நிறைவேற்றப்படும்’ என்றார்.

Related Stories: