நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தேவையான வலியுறுத்தல் அளித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டுத்தொடர் நாளை மறுநாள் நிறைவைடைய உள்ள நிலையில், நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் பேரவையில் வரவுள்ளது என தெரிவித்தார்.

மத்திய அரசை வலியுறுத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என கூறினார். நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் தமிழக சட்ட பேரவையில் வரவுள்ளது. பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு குறைவாக உள்ளதால் மேம்படுத்தப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக நாளை ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம் நடைபெற உள்ளது.

இருபது லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியை நாளை எட்டும், இரண்டாம் டோஸ் செலுத்தாமல் உள்ள 18 லட்சம் பேருக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்தப்படும். மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கி ஒரு மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். விரைவில் அனைத்து இடங்களிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: