காவலாளிக்கு பாட்டில் குத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (55), கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள புல்வெளி மற்றும் நடைபாதையில் தூங்கிய போதை ஆசாமிகளை வெளியேறுமாறு இவர் கூறியதால், ஆத்திரமடைந்த 2 பேர் பீர்பாட்டிலை உடைத்து, கணேசனை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாலிபரை வெட்டி 4 சவரன் பறிப்பு: முகப்பேரை சேர்ந்த பரத் (30), பாடி - திருமங்கலம் மேம்பாலம் வழியே பைக்கில் சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி, 4 சவரன் செயின், விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். * வில்லிவாக்கத்தை சேர்ந்த ருத்ரா (26), கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். மேலும், பகுதி நேரமாக, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை இவர், திருமங்கலம் - பாடி மேம்பாலத்தின் கீழ் மொபட்டில் சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி, செல்போன் மற்றும் மொபட்டை பறிக்க முயன்றனர். ருத்ரா அலறி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதை பார்த்ததும், 3 பேரும் தப்பினர்.