கிரைம் நியூஸ்

காவலாளிக்கு பாட்டில் குத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (55), கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள புல்வெளி மற்றும் நடைபாதையில் தூங்கிய போதை ஆசாமிகளை வெளியேறுமாறு இவர் கூறியதால், ஆத்திரமடைந்த  2 பேர் பீர்பாட்டிலை உடைத்து, கணேசனை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாலிபரை வெட்டி 4 சவரன் பறிப்பு: முகப்பேரை சேர்ந்த பரத் (30), பாடி - திருமங்கலம் மேம்பாலம் வழியே பைக்கில் சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி, 4 சவரன் செயின், விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். * வில்லிவாக்கத்தை சேர்ந்த ருத்ரா (26), கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். மேலும், பகுதி நேரமாக, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை இவர், திருமங்கலம் - பாடி மேம்பாலத்தின் கீழ் மொபட்டில் சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி, செல்போன் மற்றும் மொபட்டை பறிக்க முயன்றனர். ருத்ரா அலறி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதை பார்த்ததும், 3 பேரும் தப்பினர்.

வழிப்பறி ஆசாமிகள் சிக்கினர்: பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த நவீனா (27), சோழிங்கநல்லூர் சர்வீஸ் சாலையில் சென்றபோது, அவரை வழிமறிந்து ரூ.3 ஆயிரம், செல்போன் மற்றும் அரசு அடையாள அட்டைகளை பறித்து சென்ற துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அஜய் (19), அஜித் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி: பல்லாவரம், கணபதி நகர் 1வது தெருவை சேர்ந்த இர்ஷாத் (25), தனது சண்டை கோழிக்கு நீச்சல் கற்றுத்தர நேற்று முன்தினம் கீழ்கட்டளை ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் சண்டை கோழிக்கு நீச்சல் கற்று கொடுத்தபோது, நீரில் மூழ்கினார். அவரது உடல் நேற்று கரை ஒதுங்கியது.  போலீசார், சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: