வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய பொறியாளர் மீது நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வடபழனியை சேர்ந்த என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ள 2000 சதுர அடி நிலம் வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமானது. அதில், ரூ.47 லட்சம் மதிப்பிலான இரு கட்டிடங்கள் அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்களில் அம்மா உணவகம், நியாய விலை கடை ஆகியவை இயங்கி வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் உள்ளதாக பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குத்தகை காலம் 2015ம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து அந்த இடத்தில் இயங்கி வருகிறது. அறநிலையத்துறை அனுமதி பெறாமல் கட்டிட பணிகளை மேற்கொண்ட கோடம்பாக்கம் மண்டல செயற் பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு, அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஏ.செல்வேந்திரன் ஆஜராகி, தெய்வகடாட்சம் அளித்த புகாரின்மீது விசாரணை தொடங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றார். இதனை பதிவு செய்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளான பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, சட்டத்திற்குட்பட்டு 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

ரூ.200 கோடி நிலம் மீட்கப்படும்

சட்டப்பேரவையில் நேற்று பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன்  (தமிழக வாழ்வுரிமை கட்சி) எழுப்பிய கேள்விக்கு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில்: சென்னை வடபழனியில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்பிலான 47 கிரவுண்ட் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: