கலைவாணர் அரங்கத்தில் முதல்வருடன் இலங்கை தமிழர்கள் சந்திப்பு: முகாம் பெயர் மாற்றத்திற்கு நன்றி தெரிவித்தனர்

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தமிழர்கள் 20க்கும் மேற்பட்டோர் சந்தித்து, இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். இலங்கை தமிழர் அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் எனப்பெயர் மாற்றம் செய்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.

இதற்கு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேரந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள செந்தில்குமரன், ஆனந்தராஜ், திருஞானமூர்த்தி, பாலச்சந்திரன், ஈழவேணி, இன்மலர், சர்வேஸ்வரன், விசுவலிங்கம் மலர்மகள், உட்பட  இருபதுக்கும் மேற்பட்டோர் கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது தூத்துக்குடி நாடாளுமன்ற எம்பி கனிமொழி உடனிருந்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: அகதி மக்களை சந்தித்த முதல்வர் என்றால் இவர் மட்டுமே. தமிழகத்தில் கடந்த 34 ஆண்டுகளாக அகதிகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கான குடியுரிமை வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதாக கூறியிருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துள்ளோம். எங்களுக்கான நலத்திட்ட உதவிகளையும், அடிப்படை வசதிகளையும், மாணவர்களின் கல்வி உள்ளிட்ட ஏராளமான உதவித் திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறோம். இதற்கு காரணமாக இருந்த கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். ஒட்டுமொத்த அகதி மக்கள் என்பதை மறுவாழ்வு மையம் என பெயரை மாற்றியிருக்கிறார். அதை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். எங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்ததாக கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories: