அச்சிறுப்பாக்கம் அருகே 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீமணம்புரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

செய்யூர்: அச்சிறுப்பாக்கம் அருகே இந்தலூர் கிராமத்தில் உள்ள கைலையார்ந்த உடனுறை ஸ்ரீமணம்புரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் இந்தலூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீசெங்கழுநீர் அம்மன், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீதிரௌபதி அம்மன், ஸ்ரீகங்கை அம்மன், கிராம தேவதை ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஅய்யனாரப்பன் கோயில் மற்றும் கைலையார்ந்த உடனுறை ஸ்ரீமணம்புரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், கொடிமரம், அம்பாள் கர்ப்பக்கிரக விமானங்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி, அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையில் கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 7ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 8ம் தேதி 2ம் கால, 3ம் கால  யாகசாலை பூஜையும் நடந்தன. நேற்று காலை 4 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டு யாக சாலைகளில் இருந்து கும்பங்கள் புறப்பட்டு கிராம கோயில்கள் விமானங்கள் ராஜகோபுரம், கருவரை விமானங்களில் சிவாச்சாரியார்கள் கோயில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு மகா அபிஷேகமும், சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடத்தப்பட்டன. பின்னர், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குப்பன் தலைமையில் கிராம மக்கள் செய்தனர்.

Related Stories: