சென்னை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணற்ற சலுகை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாநாடு நடத்தப்படும் என்று சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களின் பணி ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும். அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் அமல்படுத்தப்படும். கல்வி தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடரும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.