சென்னை: சமூகத்தில் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு காயிதே மில்லத், பெரியார், அம்பேத்கர், காமராஜர் விருது சென்னையில் வருகிற 18ம் தேதி வழங்கப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது எஸ்.டி.பி.ஐ. கட்சி. சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராஜர் விருதும், தமிழ் இலக்கியம் மற்றும் சிறந்த எழுத்து ஆளுமைக்காக கவிக்கோ விருதும், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக நம்மாழ்வார் விருதும், சிறந்த சமூக சேவைக்காக அன்னை தெரசா விருதும், பாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்பு களத்தில் பழனிபாபா விருதும் வழங்கி வருகிறது.