பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டு

வேளச்சேரி: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில், கடலில் குளிப்பதால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறை நாட்களிலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு சுற்றுலா வரும்போதும் மெரினாவுக்கு அடுத்தபடியாக பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வருவது வழக்கம். இவ்வாறு வருபவர்களில் பலர் கடலில் குளிக்கின்றனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கடலில் குளித்து வருகின்னர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் துறை சார்பில், பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரகளுடன் கூடிய டிஜிட்டல் பலகைகளை வைத்துள்ளனர். அதில், கடந்த 10 ஆண்டுகளில் எலியட்ஸ் கடற்கரை கடலில் குளித்த 43 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனவும், இங்கு யாரும் கடலில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் போர்டு கடற்கரையிலுள்ள போலீஸ் பூத், கவர்னர் விருந்தினர் மாளிகை அருகே உள்பட 4 இடங்களில்  வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: