சென்னை: பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தை 2021-22ம் ஆண்டில் செயல்படுத்த ரூ.490.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் ஆர்.காந்தி கூறியிருப்பதாவது: வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் 1983ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள 14 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 54 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் ஆகியோருக்கு தொடர் வேலைவாய்ப்பு அளித்தல் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சேலைகள் மற்றும் வேட்டிகள் அளித்தல் ஆகிய இரு நோக்கங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.