பேராவூரணி அருகே தற்காலிக பாலம் உள்வாங்கியதால் போக்குவரத்து துண்டிப்பு-சீரமைக்க கோரிக்கை

பேராவூரணி : சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உள்வாங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் அருகே அம்புலிஆற்றின் குறுக்கே பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து அண்மையில் மாற்றுப்பாதைக்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பெருமகளூர், திருவாப்பாடி, கட்டுமாவடி, நாகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் செல்வது வழக்கம்.

குழாய்கள் அமைத்து அதன்மீது ஜல்லிபரப்பப்பட்டு தார் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையினால் பாலத்தின் மையத்தில் உள்வாங்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் பாலத்திற்கு அந்த பகுதிக்கு செல்வதற்கு சுமார் 15 கிமீ தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளது. தற்காலிக பாலத்தின் கீழ் மேலும் நெருக்கமாக குழாய்கள் அமைத்து கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: