சென்னை: சட்டப் பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர் ராஜா(திமுக) பேசியதாவது:மாணவர்கள் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க அரசு உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க சிறு, குறு வணிக துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடம் என்றால் என்ன என்று பல்வேறு தரப்பினர் வினா எழுப்புகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் திராவிடம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூலம் மாணவர்களை அழைத்து சென்று திராவிட வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் திராவிட அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும்.