பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், பேராசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் வெற்றி அழகன், எம்.கே.மோகன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மது பிரசாத், பகுதி செயலாளர் வாசு  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் தினசரி 5 லட்சம் அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 5.58 லட்சம் பேருக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படும். கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனரா என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்கவுள்ளோம்.  இவ்வாறு கூறினார்.

Related Stories: