சென்னை: தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 329 ஏரிகள், 56 அணைகட்டுகள், 16 செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகளுக்கான திட்ட அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் கடந்த 2017 முதல் 7 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 4 கட்டங்களாக 2131 கோடியில் 4778 ஏரிகள், 477 அணைக்கட்டுகளை புனரமைத்தல், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக 743 கோடியில் 1325 ஏரிகள், 107 அணைகட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி 204 பணிகளாக மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டிருந்தது. இதில், தற்போது வரை 204 தொகுப்பில் 183 பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது.