மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு: குடிநீர் பாதுகாப்பு வாரம் முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழா நிகழ்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வீடுகளுக்கு கைபம்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தினை முதல்வர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து  சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி  ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி  ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய ஏரி ஆதாரங்கள் / ஏரிகளைப் புதுப்பித்தல், நீர் நிலை மேம்பாடு,  மறு பயன்பாடு, ஆழ்துளை கிணறு மீள் நிரப்புதல் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  மேலும், குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், திரை அரங்குகள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைப்பதற்கும்,  ஏற்கனவே உள்ள மழைநீர் கட்டமைப்புகள் புனரமைப்பு  செய்வதற்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்த இந்த விழிப்புணர்வு வாகனத்தில் ஓட்டு வீடுகள் மற்றும் கான்கிரீட் தள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான விவரங்கள், வரைபடங்கள், நீரினை குறைவாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கு ‘தண்ணீர் தன்னார்வலர்கள்’ குழு மகளிர் சுயஉதவிக் குழுவினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே கலந்துரையாடி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள். இதற்காக 200 பணிமனைகளில் தலா 2 உதவி மையங்கள் வீதம் மொத்தம் 400 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி மையத்திற்கு 5 மகளிர் சுயஉதவிக் குழுவினர் வீதம் 400 உதவி மையங்களில் 2,000 உறுப்பினர்கள்  சென்னை மாநகராட்சியில் உள்ள 35,000 தெருக்களுக்கு நேரடியாகச் சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெரிவிப்பார்கள். மகளிர் சுயஉதவிக் குழுவினர் குடிநீர் / கழிவுநீர் பற்றிய குறைகள் மற்றும் நீரில் உள்ள திடப்பொருட்களின் அளவு ஆகியவற்றை தெருக்கள் வாரியாக கேட்டறிந்து, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவார்கள்.

Related Stories: