ஓய்வு இல்லாமல் வேலை வழங்குவதாக கூறி விஷ பாட்டிலுடன் ஏட்டு போலீஸ் ஸ்டேசனில் தர்ணா

சேலம்: சேலத்தில் ஓய்வு இல்லாமல் வேலை வழங்குவதாக கூறி விஷப்பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முருகன். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார்.  ஸ்டேசன் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘‘ஓய்வே இல்லாமல் இரவு பகலாக வேலை கொடுக்கப்படுகிறது.

மப்டியில் இருப்பவர்களுக்கு வேலையே இல்லை. அவர்களுக்கு நன்றாக ஓய்வு வழங்கப்படுகிறது,’’ என்று கண்கலங்கியதுடன், விஷத்தை குடிக்க முற்பட்டார்.   உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரிடம் இருந்த விஷ பாட்டிலை பறித்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர் அங்கு வந்து அவரை சமாதானம் செய்தனர்.

Related Stories: