சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமிப்பு துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் வளத்துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பால் வளத்துறைகளின் மீதானா சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு சா.மு. நாசர் பதிலளித்து பேசியதாவது: சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனை 2021-22ம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆவின் பொருட்களை துபாய் , அபுதாபி, ஓமன் அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற வெளிநாடுகளில் விநியோகம் செய்ய முதற்கட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சேவைகளில் ஒன்றான, அவர்கள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ₹6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றார்.