வணிக நிறுவனத்திற்கு பூட்டு போட்டு இளம்பெண் தர்ணா போராட்டம்-கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோனிகா(32). இவரது கணவர் நெல்சன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில், வணிக நிறுவனம் நடத்தி வரும் எலத்தகிரி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பியிடம், கடந்த 2012ம் ஆண்டு ₹30 லட்சம் கடனாக பெற்றுள்ளனர். இதற்காக தங்களின் நிலத்திற்கான பவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சொத்தை மீண்டும் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு சோனிகா கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த சகோதரர்கள் வட்டி- அசல் என ₹1 கோடியே 27 லட்சம் கேட்டதாக தெரிகிறது. தான் வாங்கிய கடனுக்கான வட்டியுடன் சேர்த்து தருவதாகவும், தனது நிலத்தை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என சோனியா கேட்டதாகவும், அதற்கு அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, நேற்று கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள வணிக நிறுவனத்தின் கடைகளுக்கு பூட்டு போட்டு, சோனிகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, கடையின் உரிமையாளர் தனக்கு தர வேண்டிய சொத்தை பெற்றுத் தர வேண்டும் என சோனிகா கூறினார். இது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி கூறியதன் பேரில், போராட்டத்தை கைவிட்டு சோனிகா அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: