பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக மாஜி நிர்வாகி உள்பட 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக மாஜி நிர்வாகி உள்பட 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் விவகாரத்தில் அப்போதைய ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக தனிக்குழுக்களை அமைத்து சிபிஐ விசாரணையை துவங்கியது.

சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய ஹேரன்பால், பாபு, அருண்குமார், அதிமுக மாஜி நிர்வாகி அருளானந்தம் ஆகிய மேலும் 4 பேரை கைது செய்தனர்.  பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டவர்களின் பண்ணை வீடுகள் மற்றும் இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் ஹேரன்பால், பாபு, அருண்குமார், அருளானந்தம் ஆகிய 4 பேர் மீதும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: