அண்ணா நூற்றாண்டு நூலகம் மின்னூலகமாக உருவாக்கப்படும்: பள்ளிகல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகம் மின்னூலகமாக உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். சட்டபேரவையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 1,312 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். பார்வைத்திறன் குறைபாடுடையோர் பிரிவானது 2600 பிரெய்லி புத்தகங்கள், 1050 ஒலிப்புத்தகங்கள் மற்றும் 1.1 TB அளவிற்கு இதர மின்னணு தகவல் வளங்களைக் கொண்டுள்ளது.

இப்பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள்கள் மின்னஞ்சல் வழியாக ஒலி வடிவில் வாசகர்களுக்கு அனுப்புதல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க உதவுதல் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்க கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்படும். குளிர்சாதன வசதி மற்றும் இதர மின்சார  வசதிகள் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும். வன்பொருள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். மேலும் மின்னூலகம் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: