ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் ரூ.86 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். துறை ஆணையர் குமரகுருபரன், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 141 கிரவுண்ட் நிலத்தில் பள்ளிக் கட்டிடங்களுடன் கூடிய 32 கிரவுண்ட் இடம் தனியார் நிர்வாகத்திடமிருந்து கோயில் நிர்வாகத்திற்கு சுவாதீனம் பெறப்பட்டது.

தற்போது ரூ.86 லட்சத்தில் இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பள்ளியில் ஏற்கனவே 649 மாணவ, மாணவியர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருந்தார்கள். தற்போது திருக்கோயில் நிர்வாக கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மாணவ, மாணவிகளின் சேர்க்கை 830 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாணவர் களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து, உபகரணங்கள் வழங்கப்படும். மைதானத்திற்கு மதில்சுவர் அமைக்கப்படும். பள்ளியின் முகப்பில் திருக்கோயில் தோற்றம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு கூறினார்.

Related Stories: