தொட்டியம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து...15 கூலித் தொழிலாளர்கள் காயம்

கரூர்: தொட்டியம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 கூலித் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.சேலம் செல்லும் சாலையில் செம்மடை பகுதியில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது.

இந்த நூற்பாலையில் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர்,  ஏழூர்பட்டி, தோளூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று தனியார் நூற்பாலையை சேர்ந்த வேன், 25 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

அப்போது காட்டுப்புத்தூர் நத்தமேடு என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் வாழை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 15 கூலித் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

வேன் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் மூலம் காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பிரியா (21), யோகலட்சுமி (35), இந்திராணி (32),கனகவள்ளி (33),பெரியக்காள் (35), சித்திரா (31) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: