வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு இடைக்கால உத்தரவு குறித்து இன்று முடிவு: உயர் நீதிமன்ற அமர்வு தகவல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த 1983ம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்று வருவதால் அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் தடைவிதிக்க அவசியம் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து, இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இரு தரப்பும் நாளை முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணைக்கான தேதி குறித்தும் நாளை (இன்று) முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: