சென்னை: காஞ்சிபுரம் விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் சாந்தகுமார், பிரேம்குமார், உமேஷ்குமார். மூத்த மகன் சாந்தகுமார், கடந்த 2012ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இளையமகன் உமேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படிக்கும்போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவர்மீது, காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி, மணல் கடத்தல் உள்பட 7க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தவேளையில் பிரேம்குமார், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது, மர்மநபர்கள் சிலர் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.