உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரத்தில் கொடி கம்பம் நட முயன்று மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார். பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆரம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வருத்தம் அளிக்கிறது என கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை; கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன். 13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: