ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணையில் இருந்து உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த ஆண்டு தொடர் மழையால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை மற்றும் ஆழியாறு அணை நீர்மட்டம் அதிகரித்தது. இதில் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் நேற்று 119 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை குளங்களுக்கு திருப்பி விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், ஆய்வு செய்யப்பட்டு, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களுக்கு உபரி நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.