சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் நேற்று முன்தினம் வரை 1,75,055 பேர் பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை முதல்வர் கடந்த 5ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின், முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் நெல்லை) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.