காஞ்சிபுரம் அருகே பயங்கரம் அரிவாளால் சரமாரி வெட்டி ரவுடி படுகொலை: கும்பலுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு   கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி குட்டியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.  2வது மகன் பிரேம்குமார் (26). இவர், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். மேலும் மணல் கடத்தல்,  கஞ்சா, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், 2020ல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண் காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செவிலிமேடு  பகுதியை சேர்ந்த சிலர்  பிரேம்குமாரை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில், நேற்றிரவு விப்பேடு மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் நண்பர்களுடன் பிரேம்குமார் மதுஅருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு  கும்பல்,  மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.அக்கம்பக்கத்தினர்  இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்,  பிரேம்குமாரின்   சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியை  கொலை செய்துவிட்டு தப்பிய கும்பலை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 2012ல் பிரேம்குமாரின் அண்ணன் சாந்தகுமார் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுபோல் அவரது தம்பி உமேஷ்குமார் 11ம் வகுப்பு படித்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Related Stories: