ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டி பைன் பாரஸ்ட் மற்றும் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர். கொரோனா  தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் நீலகிரி  மாவட்டத்தில் அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு  தடை விதிக்கப்பட்டது. மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மேலும்  வெளியூர் நபர்கள் நீலகிரிக்கு வர இ-பாஸ் முறையும் அமல்படுத்தப்பட்டது.  தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைய துவங்கிய நிலையில், இ-பாஸ் முறை ரத்து  செய்யப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு ஏராளமானோர்  சுற்றுலா வருகின்றனர்.

இருப்பினும் நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை  திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த 4 மாதங்களுக்கும்  மேலாக சுற்றுலா தளங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் ஊட்டிக்கு வர கூடிய  சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை பார்க்க முடியாமல் தேயிலை தோட்டங்கள்,  சாலையோர இயற்கை காட்சிகளை பார்த்துவிட்டு செல்கின்றனர். ஊட்டி-கூடலூர்  சாலையில் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மூடப்பட்டுள்ள பைன்  பாரஸ்ட் பகுதியில் தடுப்புகளை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்து  வருகின்றனர். இதேபோல் காப்பு காடுகளுக்குள் அத்துமீறி நுழைகின்றனர். இதனால்  வன விலங்குகள் தாக்க கூடிய அபாயம் நீடிக்கிறது.

Related Stories: