ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை கல்வீசி தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதியதில், விசைப்படகின் பின்பகுதி உடைந்தது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். மாலை 4 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கன்போட் கப்பலில் ரோந்து வந்த கடற்படையினர், அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த படகுகளை வழிமறித்து நிறுத்தியதுடன் மீனவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.