கொரோனா 2வது அலை பாதிப்பை தாண்டி இந்தாண்டு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படும்: நிதி அமைச்சர் உறுதி

சென்னை: கொரோனா இரண்டாவது அலை பாதிப்பை தாண்டி இந்தாண்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டப்போகிறோம் என்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதத்தில் பெண்ணாகரம் தொகுதி ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது: சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19,460  கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் ரூ.18,933 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41.417  கோடி. இன்றைய பட்ஜெட்டில் ரூ.58,192 ஆகும்.

நிதித்துறை அமைச்சர்  பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்: எல்லாத்துறைகளுக்கும் ஊதியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, துறைக்கு ஒதுக்கப்பட்ட  பட்ஜெட்டில் நிதி  குறைந்ததால் அது அகவிலைப்படி ஒத்தி வைத்ததால் ஏற்பட்ட  தாக்கம் தான். வருவாய் பற்றாக்குறை பல ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. ஒரு  தவறான நோக்கத்திற்காக 24 சதவீதம் வருமானம் வளரும் என்று தற்காலிக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது அலைக்கு நாம் எந்த அலவன்சும் தரவில்லை. வளர்ச்சியை நோக்கி செல்லவிருப்பதாக கணக்கு போடப்பட்டுள்ளது.

அந்த  கணக்கு போடும் போது 2வது அலை பற்றி நோக்கம் இல்லாமல் கணக்கு போடப்பட்டுள்ளது. தவறான எதிர்பார்ப்பு எண்ணிக்கையில் இருந்து உண்மையை சொல்லியிருக்கிறோமே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் போய் இருக்கிறது. இரண்டாவது அலையின் பாதிப்பை தாண்டி 7வது ஆண்டாக இந்தாண்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டப்போகிறோம் என்பது உறுதி.

Related Stories: