நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கடிதம்..!!

சென்னை: நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க ஒன்றிய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் வைத்து கைது செய்தனர். மீரா மிதுன் உடன் அவருடைய ஆண் நண்பர் ஷாம் அபிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மீரா மிதுனின் வீடியோ மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். அந்த அடிப்படையில் மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் காவல்துறையின் கடிதத்தை ஏற்றுக்கொண்டு யூடியூப் நிறுவனம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த வீடியோ-வை மீரா மிதுன் நீக்கியுள்ளார். ஓரிரு நாட்களில் மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: