கீழடியில் ஒரே குழியில் 4 சிவப்பு பானைகள்: ஆய்வாளர்கள் உற்சாகம்

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து 4 சிவப்பு நிற பானைகள் கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதேபோல் கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கிறது.  தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் நடந்து வரும் அகழாய்வில் இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், அஜய், ரமேஷ், காவ்யா உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் தலா 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இங்கு முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள், பானைகள், பழங்கால வாள், விளையாட்டு பொருட்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. செப்டம்பருடன் பணிகள் முடிவடைய உள்ளன.இந்நிலையில் கீழடியில் உள்ள ஒரு குழியில் நேற்று சிவப்பு நிற சிறிய பானை கண்டெடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அதன் அருகிலேயே மற்றொரு பெரிய அடர் சிவப்பு நிற பானை 50 செமீ உயரத்தில் கிடைத்தது. மேலும் சேதமடைந்த நிலையில் மற்றொரு பானை, கிண்ணம் வடிவிலான கருப்பு சிவப்பு நிற சுடுமண் பானையும் கிடைத்தன. ஒரே குழியில் அடுத்தடுத்து 4 சிவப்பு நிற பானைகள் கிடைத்திருப்பது ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Related Stories: