கொரோனாவால் இறந்தவரின் உடலை 2 மாதம் கழித்து கொடுத்த விவகாரம் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சென்னை: கொரனோ தொற்று பாதித்து உயிரழிந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம் தொடர்பாக  மனித உரிமை ஆணைய டிஜிபி பதிலளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த அலமேலு என்பவர் கொரோனா தொற்று பாதித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மே 19ம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மே 22ம் தேதி இறந்தார். இதையடுத்து, அவரது உடலை எரித்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், உடலை பெற்றுகொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். உடலை எரித்ததாக கூறி ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: