கோவை: கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் 100 நாள் சாதனையையொட்டி 11,300 அரிசியை பயன்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார். கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் மனோகரன். பகுதி நேர ஓவிய ஆசிரியர். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களின் மகள் மதுராந்தகி (19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. அக்ரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறு வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர். ஓவியம் வரைந்து பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். தவிர, இரண்டு முறை தமிழக அரசிடம் விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் நூறு நாள் சாதனையையொட்டி அவரின் உருவத்தை அரிசியில் வரைந்து பரிசு அளிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, மூன்று நாட்களாக முயற்சி செய்து 11 ஆயிரத்து 300 அரிசிகளை பயன்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை வரைந்துள்ளார்.