சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த 14ம் தேதி (சனி) இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், பூ.ம.செங்குட்டுவன், அய்யாறு வாண்டையார், விஜயசாரதி, நன்னிலம் அ.கலையரசன், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.