சென்னை: சட்டப் பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்(சேலம் வடக்கு) பேசியதாவது: தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் மக்கள் பாராட்டுகிறார்கள். மாட மாளிகைக்கு அருகே மண் குடிசை வீடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக நகர்ப்புற ஏழைகளுக்காக 9,53,446 வீடுகள் கட்ட 3954 கோடியை ஒதுக்கியுள்ளனர். இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் உலகிலேயே எங்கும் இல்லாத ஒரு அற்புதமான திட்டமாகும். முதல்வராக பொறுப்பேற்ற போது கொரோனா பாதிப்பு அதிக இருந்த நேரம், அப்போது சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா படுக்கைகளை ஏற்படுத்தி தேவையான ஆக்சிஜன் வசதியையும் ஏற்படுத்தி திறந்து வைத்தார்.