காசிமேடு மீன்பிடி துறைமுகம் மேம்படுத்த ரூ.150 கோடி மீனவர்களின் நலனுக்கு ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு

சென்னை: பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழ்நாடு நீண்ட கடலோரப் பகுதியையும், பெரிய மீனவர் சமூகத்தையும் கொண்ட மாநிலம். ரூ.6,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடன், கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. மீன்பிடி தடைக்கால நிவாரண நிதிக்காகவும் சிறப்பு நிதிக்காகவும் கடல்சார் மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்காகவும் மொத்த தொகையாக ரூ.303.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுக திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை விரைந்து நிறைவு செய்யப்படும்.

புதிதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை அமைக்க மொத்தம் ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும். 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க மொத்தம் ரூ.433.97 கோடி, மீன் இறங்கு தளங்களை மேம்படுத்த ரூ.143.46 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.

Related Stories: