கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னை பெண் டாக்டர் சாவு: ஆண் நண்பர் படுகாயம்

சென்னை:  சென்னை விருகம்பாக்கம், செல்வகணபதி நகரை சேர்ந்தவர் எஸ்தர் வினிதா (38). அதே பகுதி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த கிருஷ்ணா (36). டாக்டர்கள். இருவரும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் எஸ்தர் வினிதா, கிருஷ்ணா ஆகியோர் சிதம்பரத்தில் இருந்து காரில் சென்னை புறப்பட்டனர். காரை கிருஷ்ணா ஓட்டினார். காலை சுமார் 7 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த வெண்ணாங்குப்பட்டு அருகே கொளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிக்கெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த எஸ்தர் வினிதா (38) சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணா (36) படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த சூனாம்பேடு போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த கிருஷ்ணாவை மீட்டு சிகிச்சைக்காகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: