தொலைபேசியில் புக்கிங் செய்தால் இருப்பிடத்திற்கு டீசல் விநியோகம்!: சென்னையில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் புதிய சேவை..!!

சென்னை: சென்னை அம்பத்தூரில் தொலைபேசி வாயிலாக புக்கிங் செய்தால் இருப்பிடத்திற்கே சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மென்பொருள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி நேரங்களில் ஜெனரேட்டர் போன்றவற்றிற்கு டீசல் தீர்ந்துவிட்டால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல இரவு நேரங்களில் கனரக வாகனங்களின் அவசர தேவை கருதி இந்த சேவை தொடங்கப்பட்டிருப்பதாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் தேவைப்படும் நபர்கள் தங்களின் இருப்பிடம் போன்றவற்றை போன் மூலம் பதிவு செய்தால் தேவைக்கேற்ப வாகனங்களில் எடுத்துச் சென்று தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்தவர் தெரிவித்ததாவது, சுமார் 6,000 லிட்டர் வரை இந்த பங்கில் இருந்து இலவசமாக இருப்பிடத்திற்கு சென்று வழங்கப்படும். 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 20 முதல் 6,000 லிட்டர் வரை தேவையான டீசல் இங்கிருந்து விநியோகிக்கப்படவுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அனைத்தையும் சேர்ந்து சுமார் 25 பெட்ரோல் பங்குகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Related Stories: