சென்னை: வரும் 20 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் நோபல் பரிசு பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று துணை வேந்தர் பேராசிரியர் வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தின் 11வது துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேல்ராஜ், நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் பாடத்திட்டம், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக இல்லை. தற்போதுள்ள பாடத்திட்டத்தின் பாடப் பொருளை 20 சதவீத மாணவர்கள் மட்டுமே புரிந்து நன்கு படிக்க முடியும். மற்றவர்கள் அதை படிக்க சிரமப்படுவதாக தெரிகிறது.