அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து தமிழக ஆளுநர் புரோஹித் உத்தரவு!!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அண்ணாபல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது பதவிக்காலம், ஏப்., 11ல் முடிந்தது. இதையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் சார்பில் புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆன்லைன் வழியாக நேர்முக தேர்வு நடந்தது.

இந்த நிலையில் டாக்டர் ஆர்.வேல்ராஜ் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார்.வேல்ராஜ் துணைவேந்தராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வு துறை இயக்குனராக ஆர்.வேல்ராஜ் பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் பேராசிரியராக 33 ஆண்டுகள்  அனுபவம் பெற்ற வேல்ராஜ் 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். 193 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள ஆர்.வேல்ராஜ்,துறைத்தலைவர், துணை இயக்குனர் உட்பட 14 ஆண்டு நிர்வாக அனுபவமும் கொண்டவர் ஆவார்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழரான வேல்ராஜை நியமித்தது வரவேற்கத்தக்கது என்று அருள் அறம் தெரிவித்துள்ளார்.வேல்ராஜை நியமித்ததற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: