கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன், தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியும் பதிவு செய்து, தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்தப்படுகிறார்கள்.