புழல்: சோழவரம் அடுத்த காரனோடை சண்முகா நகரை சேர்ந்த கன்யாலால் மகன் அர்ஜூன் (14). அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் சத்தியநாராயணன் (15). நண்பர்களான இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். பெரம்பூர் மதுரைசாமி மடம் கிழக்கு தெருவை சேர்ந்த சையது சனாவுல்லா மகன் சையது ரகமதுல்லா (13), அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன், காரனோடை சண்முகா நகரில் உள்ள பெரியம்மா கசிகோபீ வீட்டுக்கு கடந்த வாரம் வந்துள்ளான். அப்போது, அர்ஜூன், சத்தியநாராயணன் ஆகியோருடன் ரகமதுல்லா நண்பரானான். இவர்கள் மூவரும் ஒன்றாக விளையாடி திரிந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் இவர்கள் மூவரும் வீட்டுக்கு தெரியாமல், காரனோடை மாந்தோப்பு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு, ஆழமான இடத்திற்கு சென்றதால், 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து, அலறி கூச்சலிட்டனர். ஆனால், அது ஆள்நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால், யாருக்கும் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் நீரில் மூழ்கினர்.