சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் சார்பில் வக்கீல் பரணிகுமார், சண்முகம் சார்பில் வக்கீல் ராமசாமி ஆஜராகினர். விசாரணையின்போது, காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.