திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்திற்கு ஏலம்

திருவாரூர் : திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 189க்கு ஏலம் போனது.மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதையடுத்து குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி நெல் சாகுபடியையடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் கொள்முதல் ஏலம் கடந்த மாதம் 16ம் தேதி துவங்கிய நிலையில் 7வது வாரமாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்றது.

இதில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 2 ஆயிரத்து 370 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 189க்கும், குறைந்த பட்சமாக ரூ.7 ஆயிரத்து 369க்கும் மற்றும் சராசரியாக ரூ.7 ஆயிரத்து 762க்கும் ஏலம் போனதாக விற்பனை கூடத்தின் செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: