சென்னை: நடப்பு கல்வியாண்டில், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம் என்று இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.